
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற, புளொட் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த சதானந்தனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்து உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“தமிழ் மக்கள் இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் என்றுமில்லாதவாறு நெருக்கடிமிக்க காலமாக இன்றைய நிலைமை இருக்கின்றது.
இங்கு பேசிய எல்லோருடைய பேச்சுக்களும் நாங்கள் இன்னும் சரியான இடத்திற்கு வந்து இருக்கவில்லை என்பதையும், இன்னும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டிலே நாங்கள் பயணிக்கவில்லை என்பதையும் மிகமிக தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன.
அதற்காக நானும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.
இந்த இனத்துக்காக மிக நீண்டகாலமாக உழைத்தவன் என்கிற ரீதியிலும் மிகப்பெரிய பாரம்பரிய முறைய கட்சி ஒன்றினது தலைவர் என்கிற ரீதியிலும் நானும் அதற்கான பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறேன்.
அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு எந்த பக்கம் திரும்பினாலும் ஒன்றுபட்ட தரப்பாக ஒற்றுமை பட்ட தரப்பாக நாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்ற விடயம் இன்று நேற்றல்ல மிகநீண்ட காலமாகவே பேசப்பட்டு கொண்டிருக்கின்றது. துரதிஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லை.
அதற்காக நாங்கள் இதை கைவிட்டுவிட முடியாது இதை கைகூட வைக்கின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
கட்சிக்கு உள்ளே என்றாலும் சரி கட்சிக்கு வெளியிலே ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றாலும் சரி முதலில் சமாதானம் பேசுகிற தூதராக இருந்தவர் காலம்சென்ற தர்மலிங்கம் தான்.
அவருடைய வழித்தோன்றலான சித்தார்த்தன், தமிழ் தேசிய இனத்தினுடைய நன்மை கருதி சிதறிப் போயிருக்கக் கூடிய தமிழர் தரப்புக்களை ஒன்றிணைக்க கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.
எந்த ஒரு விடயத்தையும் நிதானமாகவும், பொறுப்பாகவும் செயற்படுத்தி எல்லோரோடும் நட்போடு பழகக் கூடிய தன்மையும் இருக்கக்கூடிய சித்தார்த்தன் ஒற்றுமை முயற்சியை தலைமை தாங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று நான் அவரிடம் மிகவும் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன். அதை அவர் நிறைவேற்ற வேண்டும்.
அதுதான் அவர் தமிழினத்திற்கு செய்யக்கூடிய ஒரு மாபெரும் கடமையாக இருக்கும்” என தெரிவத்துள்ளார்.


