
அமைச்சரவையில் இணையுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது வரை கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
“தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவாக அமைச்சரவை அமைக்கப்பட்டால் தான் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூட அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடலை நடத்தலாம் மற்றும் அவருக்கு சுயமரியாதை இருந்தால் சரியான அரசாங்கத்தை அமைக்க முடியும்.
ஆனால், பிரதமர் ரணில் அரசியல் கட்சிகளை உடைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். இதற்கான நிதியும் தயாராக உள்ளது.
அரசாங்கத்தில் சேருபவர்கள் பணத்துக்காகவோ அல்லது பதவிக்காகவோ செய்கிறார்கள்.
தற்போதைய அரசாங்கம் பகட்டான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்ட அரசுக்கு உலகில் யாரும் உதவ மாட்டார்கள்”
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என்று வெளியாகும் செய்திகளும், சதித்திட்டத்தின் ஒரு அங்கமேயாகும்.
சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க காலதாமதம் செய்தார் என்ற குற்றச்சாட்டு தவறானது.
ஐ.தே.க தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில், பிரதமரை நியமிப்பதற்கான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஏற்பட்டு விட்டது” என்றும் அவர் கூறினார்.


