
ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று, உரையாற்றிய அவர், “ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்காக நிலையியற் கட்டளையை இடைநிறுத்துவதா என்பது குறித்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக சாடினார்.
“குறித்த விவாதம் நம்பிக்கையில்லா பிரேரணையின் ஒரு பகுதியே. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் காரணமாக ஜனாதிபதி தனது பதவியை இழக்கமாட்டார்.
பெயர் பலகையில் உங்கள் பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியை பாதுகாப்பது யார் பாதுகாக்க விரும்பாதது யார் என்பது நாட்டிற்கு தற்போது தெரியும்.
இது பிரதமர் மற்றும் அரசாங்க தரப்பில் அமர்ந்திருப்பவர்களின் வெட்கக்கேடான நடவடிக்கை.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உருவாக்கப்பட்ட வேளை எதிர்க்கட்சியில் காணப்பட்ட பிரதமர் அதனை ஏற்றுக்கொண்டார்.
அவர் அதன் நகல்வடிவை பார்வையிட விரும்பினார். நான் அதனை ஏப்ரல் 26ஆம் திகதி அவருக்கு அனுப்பினேன்.
அவர் அதனை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அனுப்பி அவர்களின் இணக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளியிட்டு கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக தான் வாக்களிப்பேன் என பிரதமர் இரண்டு முறை அறிக்கை வெளியிட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஏன் தனது மனதை மாற்றினார், ஏன் முன்னர் தெரிவித்தது போல தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை?
அவர் என்ன விளையாட்டு விளையாடுகின்றார்? அன்றைய நாளிற்கும் இன்றைய நாளிற்கும் இடையில் ஒரேயொரு மாற்றமே நிகழ்ந்துள்ளது.
அவருக்கு பிரதமர் என்ற வேலை கிடைத்துள்ளது.
பிரதமர் பதவிக்காக விக்ரமசிங்க தனது கொள்கைகளை விட்டுக்கொடுத்துள்ளார், நாட்டிற்கு பகிரங்கமாக அறிவித்த கொள்கைகளை விட்டுக்கொடுத்துள்ளார்.
எமது பிரதமர் அப்படிப்பட்டவர் தான்- நடக்கின்றாரா நிற்கின்றாரா என்பது தெரியாத ஒருவர் பிரதமராகியிருப்பது குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம். அவருக்கு கொள்கைகள் என்றால் என்னவென்பது தெரியாது. அவர் ஒன்றை சொல்லுவார் ஆனால் இன்னொன்றை செய்வார்” என்றும் சுமந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.


