மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும் நிலைமை இருக்கும். வடக்கிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்றன.
இந்தநிலையில் பிரிந்து நின்றால் செல்வாக்கை கூட்டலாம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அது சாத்தியமான விடயம் அல்ல.
தெற்கிலே மொட்டு மற்றும் யானை செல்வாக்கை முற்றும் முழுதாக இழந்திருக்கின்ற நிலையில் மொட்டு தேர்தலில் நிற்கவே முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
யானை கடந்த தேர்தல் காலத்திலேயே முற்று முழுதாக தூக்கி எறியப்பட்டது. இந்த சூழ்நிலையில், அவர்கள் கூட்டு சேர்ந்தால் மக்கள் செல்வாக்கை பெறலாம் என்று நினைக்கிறார்கள்
யதார்த்தத்திற்கு முரணாண வகையிலே சிந்தித்து வெற்றி பெறலாம் என்று நினைத்து ஏதோ நடவடிக்கை எடுப்பதாக நினைக்கின்றார்கள்.
தெற்கிலே ராஜபக்ஷக்களுக்கு மக்கள் மத்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலே ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்சவை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதனால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பது ஒரு வேடிக்கையான விடயமாகவே உள்ளது.
ஒட்டுமொத்தமாக உலகமே நிராகரிக்கின்ற தேர்தலிலே மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்தற்காக மொட்டுடன் யானை கூட்டு சேருவது என்பது வேடிக்கையான விடயமாகும் என்று தெரிவித்துள்ளார்.