உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அவரது உரையில் உக்ரைன் போரே முக்கிய இடம் பெற்றிருந்தது. ரஷ்யா – உக்ரைன் மோதல் காரணமாக உலகம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து அதனை உறுதிப்படுத்தப் போவதாகவும் ஓலஃப் ஸ்கோல்ஸ் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மோதல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வளரும் நாடுகள் எதிர்மறை பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கூட்டு முயற்சியின் மூலமாகவே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதையும், ஜி20 மாநாட்டில் இதற்கு முக்கியத்துவம் அளிப்பது எனவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தையும் தூதரக அணுகுமுறையும் மிகவும் அவசியம் என்பதை இந்தியா தொடக்கம் முதலே கூறி வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.