சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
எமது கடல் பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாளாந்தம் அறியக் கிடைக்கின்றது.
இவற்றை கட்டுப்படுத்த கடலோர காவல் படையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், உருவாக்கப்படவுள்ள இந்த தொண்டர் அணி செயற்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ் மாவட்டத்தின் சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரம் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுள்ளார்.