யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணியின் வலைபயிற்சியின் போது பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும் சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றது.
தற்போது ஐ.பி.எல். இல் ராஜஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடன் குமார் சங்கக்கார கதைத்திருந்தார். எனது கிரிக்கெட்டை அடுத்து கட்டத்திற்கு எடுத்து செல்ல கவனிக்கின்றேன் என்றார்.
அது தொடர்பில் சிலருடன் கதைத்து எனக்கான வாய்ப்புக்களை பெற்று தந்துள்ளார். அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.எனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை நான் முடிந்தளவு பயன்படுத்தி என்னை வளர்த்துக்கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.