பிரான்சில், ஒய்வூதிய திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது பிரான்ஸ் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
பிரான்சில் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒய்வூதிய திட்டத்தை அரசு நிர்வாகம் நடைமுறைப்படுத்தியது. இதற்கு அரசு ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவம் பதிவாகி வருகின்றது. இதனால் அரச நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் அரச முறைப்பயணமாக பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மார்ச்26 முதல் 28 வரை பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்தார்.
தற்போது அவரது பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக பிரித்தானிய அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் வகையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து உள்ளன. நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து அவர்கள் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறைகளும் வெடித்துள்ளது.