காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகருக்கு ஏற்றவகையில் அதனை சுற்றியுள்ள சூழலை ஏற்படுத்தவும் அந்த பகுதியல் இருக்கும் ஹோட்டல்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்குமே காலிமுகத்திடலில் போராட்டங்கள் பேரணிகள் நடத்துவதை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடலை விற்பனை செய்யப்போவதாக பிரசாரம் செய்தே 1996ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை தோல்வியடையச்செய்தது.
ஆனால் பின்னர் அவ்வாறு பிரசாரம் செய்துவந்தவர்களே சுமார் 15வருடங்களுக்கு பின்னர் நாங்கள் ஆரம்பிக்க இருந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, தற்போது போட்சிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்தார்கள். எனறாலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இது சிறந்த வேலைததிட்டமாகும்.
தற்போது அந்த பிரதேசத்தில் போட்டி அமைக்கப்படுள்ளதால், அந்த இடம் மற்றும் அதற்கு சூழவுள்ள இடம் போட்டிக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும். அங்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது பொருத்தம் இல்லை. போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தேவையான அளவு மைதானங்கள் இருக்கின்றன. அங்கு இதனை முன்னெடுக்கலாம்.
அத்துடன் காலிமுகத்திடலில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் காரணமாக அந்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் நடவடிக்கைகளுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு மத நடவடிக்கைகளுக்கு மாத்திரம் குறிப்பிட்ட நேர வரையறையுடன் அனுமதி அளித்து ஏனைய களியாட்ட நிகழ்வு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை காலிமுகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்தது என்று தெரிவித்துள்ளார்.