deepamnews
இலங்கை

சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து மீனவர்களை காப்பாற்றுங்கள் – இந்தியாவிடம் மீனவர்கள் கோரிக்கை.

வடக்கு கடலை சீனாவுக்கு வழங்குவதற்கு இலங்கை கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் வடக்கு கிழக்கு மீனவர்களது வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்த அழிவில் இருந்து காப்பாற்றுங்கள் என இந்தியாவிடம் வடக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (03) நடத்திய ஊடக சந்திபில் ஊர்காவற்றுறை க.தொ.கூ.சங்கங்களின் சமாச செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இதன்போது வடமராட்சி வடக்கு க.தொ.கூ. சங்கங்களின் சமாச உப தலைவர் நா. வர்ணகுலசிங்கம், ஆதிகோவிலடி க.தொ.கூ. சங்க செயலாளர் இ.மதியழகன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அ. அன்னராசா மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையினுடைய கடற்றொழில் திணைக்களத்தினால் எங்களுடைய வளங்களும், வாழ்வாதாரங்களும், சீனா நாட்டுக்கு விற்கப்பட்டு வருகின்றன. இதனால் எங்களுடைய இருப்பே கேள்விக்குறியாக்குகின்ற நிலையேற்பட்டுள்ளது. இலங்கையின் கடற்றிழில் திணைக்களமும், சீனாவும் சேர்ந்து, வடக்கு கடற்றொழிலாளர்களை கடலை விட்டு அந்நியப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் எங்களுடைய நாட்டிலே எங்களுடைய கடலிலே குறிப்பாக வடகிழக்கு கடலிலே நாங்கள் சுதந்திரமாக கடைற்றொழிலில் ஈடுபட்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத அளவுக்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இம்மாதம் 6 ஆம் திகதி சீன நாட்டு தூதுவர் கூட யாழ் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்கின்றார்.

எங்களுடைய பகுதியிலே கிடைக்கின்ற புரதச் சத்துடைய மீனை அல்லது கடல் உணவை பிடித்து எங்களுடைய மக்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலைகளை ஏற்படுத்திவிட்டு, சீன நாட்டு கடலட்டை பண்ணைகளை அமமைத்து அங்கு கடலட்டைகளை உற்பத்தியாக்கி அதை சீன நாட்டில் இருப்பவர்களுக்கு உணவாக கொண்டு செல்வதற்கு முயற்சி எடுக்கின்றார்கள்.

வடக்கு கடலிலே சீனாவின் ஆதிக்கம் இருக்கியது. இந்த ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி எங்களுடைய கடலில் நாங்கள் இறைமையுடன் வாழ்ந்து தொழில் செய்வதற்கு எங்களது வாழ்வாதாரத்தை கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, எங்களது அண்டை நாடு என்ற வகையில் இந்திய அரசாங்கத்திடமும் பாரத பிரதமரிடமும் பலதடவைகள் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையை, இன்று இந்தியாவின் நிதிய அமைச்சர் அம்மணி அவர்களிடமும் தயவாக முன்வைக்கின்றோம்.

எங்கள் தொப்புள் கொடி உறவாக தமிழ்நாடு இருக்கும் அடிப்படையில் இந்திய நாடு முன்வந்து எங்களது வடக்கு கடலிலே ஏற்பட்டுள்ள சீன ஆதிக்கத்தை குறைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதேபோன்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்கும் எமக்கும் இடையே இருக்கும் தொப்புள்கொடி உறவுக்கு தடையாக இருக்கின்ற தமிழ்நாடு மற்றும் புத்சேரியை சேர்ந்த சுமார் 2,500 இற்கு மேற்பட்ட இழுவைப்படகுகளினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்த பாதிப்பில் இருந்து எங்கள் வடக்கு கடற்றொழிலாளர்களையும் எங்கள் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதில் இருந்தும் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். அந்த நடவடிக்கை என்பது 2016 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் திகதி டில்லியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்திலே எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் இழுவைமடி தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டது. அதனடிப்படையில் இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் சென்று இந்திய இழுவைப்படகுகளினால் எங்கள் கடல்வளமும் எங்களது வாழ்வாதாரமும் அழிக்கப்படுவதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கு கடலில் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டிற்கும் வடக்கு மீனவர்களுக்கும் இடையே பிரச்சினையாக காட்டி இலங்கை அரசாங்கமும் கடற்றொழில் திணைக்களமும் மீனவர்களை திசைதிருப்பிவிட்டு மறுபக்கமாக சீனாவை கொண்டுவந்து எங்களுடைய முற்றத்தில் நிறுத்தும் செயற்பாட்டை மேற்கொள்கின்றார்கள்.

இவ்வாறு சீனா நாடு வடக்கு கடற்பரப்பில் நுழைவதற்கு தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 2,500 இற்கு மேற்பட்ட இழுவைப்படகுகளின் அத்துமீறலே காரணமாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். எனவே குறித்த 2,500 இழுவை படகுகள் மூலம் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தி, வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என தொப்புள்கொடி உறவுகள் என்ற அடிப்படையில் நாங்கள் தயவாக கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு இந்திய அரசும் பாராத பிரதமரும் உரிய முக்கியத்துவம் கொடுத்து எங்களை அழிவில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகை இன்று

videodeepam

சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு – பல பகுதிகளில் நினைவேந்தல்கள்  

videodeepam

19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் மின்னல் எச்சரிக்கை!

videodeepam