மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
இதையொட்டி யாழ்ப்பாணம் – நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நேற்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது பொதுச்சுடரை மூன்று மாவீரர்களின் தாயாரான சிவபாதம் இந்திரவதி ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ச்சியாக சிறுவர், சிறுமியர்களால் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை திரை நீக்கம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தாயக மண்ணின் விடியலுக்காக வித்தாகியவர்களில் கிடைக்கப் பெற முடிந்த 24 ஆயிரத்து 379 மாவீரர்களின் பெயர்களை உள்ளடக்கிய கல்லறைகளையும், சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தினர்.