தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி அணியும் ஆடை குறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
‘பிரதமர் மோடி ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட லட்சம் ரூபா மதிப்புள்ள ஆடைகள் அணிகிறார். நான் ஒற்றை வெள்ளை ரி சேர்ட்டையே அணிகிறேன்” என்றும் அவர் கேலி செய்தார்.
இன்னும் ஒரு வாரத்தில் தேர்தலைச் சந்திக்க உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாட்னா மாவடத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பேரணியில் அக்கட்சியின் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

இதன்போது ராகுல் காந்தி மேலும் உரையாற்றுகையில், பிரதமர் மோடி ஒரே நாளில் 1 லட்சம் ரூபா மதிப்புள்ள ஒன்று அல்லது இரண்டு உடைகளை மாற்றுகிறார். அவர் ஒரே உடையைத் திரும்ப அணிந்து நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்ளா? நான் இந்த ஒற்றை வெள்ளை நிற டி-ஷர்ட் மட்டுமே அணிகிறேன்..
அத்துடன், நான் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவர் தனது ஒவ்வொரு பேச்சிலும் நான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர் என்று அடிக்கடிச் சொல்வார். இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லியே பிரதமரானார். இப்போது அவரது பேச்சில் ஏன் சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவது இல்லையென்று உங்களுக்குத் தெரியுமா? நான் சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறேன். நான் அதுபற்றி பேசத் தொடங்கியதிலிருந்து, பிரதமர் மோடி இந்தியாவில் சாதி இல்லை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்.
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், முதல் நடவடிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று கண்டறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.