புலனாய்வாளர்களால் தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம்.
இதன்போது எம் இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வருவதனை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட EP BEY 2600 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றே எம்மை பின்தொடர்ந்து வந்தது.
இதுதொடர்பில் எமது பாதுகாப்பு அதிகாரிகள் பொலிசாருக்கு அறிவித்தனர்.
பொலிஸ் பொறுப்பதிகாரி அலோக்க பண்டார சிறிது நேரத்திற்கு பின்னர் எங்களின் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, புலனாய்வாளர்களே எங்களை பின்தொடர்வதாக தெரிவித்தார்.
எதிர்கட்சியில் உள்ளவர்களை ஏன் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றனர்.
புலனாய்வாளர்களுக்கு எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார்கள் சைக்கிள்கள் வழங்கப்பட்டன?
இவ்வாறான செயற்பாடுகளினால் எங்கள் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.