பாலஸ்தீனுடனான தமது 75 ஆண்டுகால மோதல் வரலாற்றில் இஸ்ரேல் நேற்று காஸா பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான காஸா மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை உள்ளிட்ட இடங்களில் பலர் பதுங்கிக் கொண்டிருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
அத்துடன், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் சுமார் 770 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என காஸாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/10/APTOPIX-Israel-Palestinians-0_1696965608790_1696992142989.webp)
அத்துடன், ஹமாஸ் தரப்பினரின் தாக்குதல்களால் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 900 ஐ எட்டியுள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
பெரும்பாலும் பொதுமக்கள் வீடுகள், தெருக்கள், நடன விருந்தகங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களும் சில வெளிநாட்டவர்களும் பணயக் கைதிகளாக காஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மூன்று காஸா ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த மோதல்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.