deepamnews
இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது சவாலாக காணப்படுகிறது – ஜனாதிபதி!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “நாட்டின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், கட்டம் கட்டமாக தற்போது முன்னேற்றமடைந்துக் கொண்டு வருகின்றன. கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியாவுடனும் சீனாவுடனும் நாம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம். இந்த நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன.

மிக விரைவிலேயே இதற்கான முறையான பதில் கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். எவ்வாறாயினும், எமக்கான நிதியுதவிகள் உடனடியாக ஒரே தடவையில் கிடைத்துவிடாது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது. அடுத்ததாக ஓய்வூதியம் கொடுப்பதும் சவாலான ஒன்றாக இருக்கிறது.

சமூர்த்தி கொடுப்பனவை வழங்குவதும் அடுத்த சவாலாக காணப்படுகிறது. அதேநேரம், நாம் மருந்துகளைக் கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கவில்லை என எம்மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. 100 மில்லியன் இதற்காகத் தேவைப்படுவதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறுகிறார்கள். சுகாதாத திணைக்களம், கடந்த சில வருடங்களாக செலுத்தாமல் உள்ள 50 பில்லியன் ரூபாய்க்கான பற்றுச்சீட்டு தற்போதும் இருந்து வருகிறது. இது பாரிய பிரச்சினையாகும்.

ஆனால், நாம் இந்த வருடத்திற்கு மாத்திரம் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய 30 – 40 பில்லியன் ரூபாயை ஒதுக்குவோம் என்பதை இங்கே கூறிக்கொள்கிறோம். சுகாதார அமைச்சும் திறைச்சேரியும் இணைந்துதான் இந்தப் பிரச்சினைக்கானத் தீர்வை ஆராய வேண்டும். கடந்த வருடம் எமக்கு உணவுத்தட்டுப்பாடு காணப்பட்டது.

இம்முறையும் உணவுத்தட்டுப்பாடு இருக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டுள்ளமயால் இந்தப் பிரச்சினை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் நெல் கிலோ ஒன்றின் விலையை 100 ரூபாயாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக நாம் 10 பில்லியன் ரூபாயை இம்முறை ஒதுக்கியுள்ளோம்.

75 ஆவது சுதந்திர தினத்தை நாம் தற்போது கொண்டாடவுள்ள நிலையில், இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம் என்றுதான் அனைத்துக் கட்சிகளுக்கும் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறேன். சவால்களிலிருந்து நாம் ஒன்றிணைந்து வெற்றியடைவோம். எனவே, எதிர்க்கட்சி – ஆளும் கட்சி என பேதம் பார்க்காமல் ஒன்றாக செயலாற்ற அனைவரையும் அழைக்கிறேன்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் பிரதமர் பதவி ஏற்பாரா மஹிந்த –  நாமல் வெளியிட்ட கருத்து

videodeepam

சென்னை – இலங்கை இடையேயான முதல் பயணக் கப்பல் கொடியசைத்து தொடங்கி வைப்பு

videodeepam

வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி முதலிடம்.

videodeepam