திருகோணமலை மாவட்டத்தில் பல வருட காலங்களாக இனம், மதம், மொழி பேதமின்றி பொதுமக்களின் நலன் கருதி செயற்படுத்தப்பட்டு வருகின்ற மனிதாபிமான உதவித்திட்டம் இவ்வருடமும் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில் மூதூர் பிரதேசத்தின் பாலத்தடிச்சேனை, கட்டைபறிச்சான் தெற்கு மற்றும் ஜின்னாநகர் ஆகிய மூன்று இடங்களிலும் இந்த செயற்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-18-at-5.05.04-PM.jpeg)
அந்த வகையில் இம்முறை இந்த மனிதாபிமான உதவித்திட்டமானது இயற்கை அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களை இணங்கண்டு அப்பகுதிகளை முற்று முழுதாக சுத்தம் செய்தல், வீதி மற்றும் வடிகான்களை சுத்தம் செய்தல் போன்ற சிரமதானப் பணிகள் 20 நாட்கள் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-18-at-5.05.05-PM-1.jpeg)
இவ் வேலைத்திட்டத்தில் பங்குபற்றும் 136 பயனாளிகளுக்கு 10 நாட்களுக்கு 18500 ரூபாய் வீதம் 20 நாட்களின் முடிவில் 37000 ரூபாய் பணத்தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த சிரமாதானப் பணிகளுக்கு தேவையான சுமார் 1,031,100 ரூபாய் பெறுமதியான அனைத்து உபகரணங்களும் கருவிகளும் பயனாளிகளின் முன்னிலையில் அந்தந்தப் பகுதிகளுக்கு பொறுப்பான அரசாங்க உத்தியோகத்தர்களிடம் கிராம சேவகர் காரியாலயங்களில் வைத்து இன்று கையளிக்கப்பட்டது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-18-at-5.05.04-PM-1.jpeg)
இத்திட்டத்தினை USAID எனப்படும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்காவின் முகவர் அமைப்பு, SAVE THE CHILDREN மற்றும் LEADS ஆகிய மூன்று நிறுவங்களே இணைந்து செயற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.