deepamnews
இலங்கை

முச்சக்கரவண்டி சாரதிக்கு மரண தண்டனை – நீதிபதி இளஞ்செழியன் அதிரடி

முச்சக்கரவண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கரவண்டி சாரதிக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு தை மாதம் 28ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது அங்கு சிலருக்கு இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் பின் அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர். மறுநாள் 29ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சடலம் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கரவண்டி ஒன்றில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து முதலாம் எதிரியான வவுனியா – தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரண்டி சாரதி கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேகநபரான பிறிதொரு முச்சக்கரவண்டி சாரதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அரச சட்டவாதியான தர்சிகா திருக்குமரநாதனின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கரவண்டியில் பெறப்பட்ட இரத்த மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் இரத்த மாதிரியும் ஒத்துபோவதை தடவியல் பொலிஸார் மன்றில் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியமளித்துள்ளார்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக்கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை செய்துள்ளார் என்பது அரச சட்டவாதியால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூப்பிக்கப்பட்டுள்ளதால், முதலாம் எதிரிக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன், இரண்டாம் எதிரியான சந்தேகநபரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

அரசியல்வாதிகளுக்கு வருகிறது வரி கோப்பு  – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

மீண்டும் பிரதமர் பதவி ஏற்பாரா மஹிந்த –  நாமல் வெளியிட்ட கருத்து

videodeepam

சுமைதாங்கியோடு எரிபொருள் பவுசர் மோதி விபத்து – சுமைதாங்கி கற்களை முற்றாக அள்ளிச் சென்ற நுணாவில் வாசி!

videodeepam