deepamnews
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து- பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் “எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆராயும் வகையில் நீதி அமைச்சு, வெளிநாட்டு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை கடற்படை, வர்த்தக கப்பற்துறை செயலகம், தேசிய நீர்வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவகம், துறைமுக அதிகார சபை, சூழல் அதிகார சபை, வன வளங்கள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது.

தற்போதைய எமது வெளிநாட்டலுவல்கள் கௌரவ அமைச்சர் அலி சப்ரி அவர்கள், அப்போது நீதி அமைச்சராக இருந்தார். அவரது பங்களிப்பும், அப்போதைய கடற்றொழில் இராஜாங்க அமைச்சராக இருந்த தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி கௌரவ அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களதும், சட்டமா அதிபர் அவர்களதும் பங்களிப்புகள் மகத்தானவையாகும்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கும், கடற்றொழில் சார்ந்த கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவகம், கடற்றொழில் அமைச்சரின் அலுவலகம், கடல்சார் பல்கலைக்கழகம், கடற்றொழிலாளர் சங்கங்கள், கத்தோலிக்க சபை ஆகியனவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இக்குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவின் மூலமாக கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களின் ஊடாக, பிரதேச செயலாளர்களினதும், கடற்றொழில் சங்கங்களினதும் பங்கேற்புடன் மேற்படி விபத்து காரணமாக வாழ்வாதாரங்களை இழந்தவர்களாக 15,032 கடற்றொழிலாளர்களும், கடல் தொழில் சார்ந்த கைத்தொழில்களில் ஈடுபட்டவர்களில் வாழ்வாதாரங்களை இழந்தவர்களாக 4,888 பேரும் இனங்காணப்பட்டனர்.

இதில், இனங்காணப்பட்டுள்ள 15,032 கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கென எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனத்தின் மூலம் முதல் கட்டமாக 349 மில்லியன் ரூபாவும், இரண்டாவது கட்டமாக 335 மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 684 மில்லியன் ரூபா இடைக்கால நட்டஈடாகக் கிடைத்துள்ளன.

இத் தொகையானது மேற்படி கடற்றொழிலார்களின் வாழ்வாதார பாதிப்பிற்கேற்ப மதிப்பீடு செய்யப்பட்டு இரு தடவைகளில் பிரதேச செயலாளர்கள் ஊடாக அக் கடற்றொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்தார்.

Related posts

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸிற்கு அளித்த உறுதிமொழி

videodeepam

எரிபொருள் கையிருப்பை பேணாத நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

videodeepam

அடுத்த ஜனாதிபதி மொட்டுக் கட்சியின் ஆதரவைப் பெற்ற ஒருவரே – பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.

videodeepam