மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு நன்கொடையாக கிடைத்த மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விசாரணையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான சட்ட மற்றும் ஒருக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி நேற்றைய தினம் குறித்த விசாரணைகளுக்காக இரண்டு விசாரணை குழுக்கள் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு சென்றுள்ளன.
இதன்போது, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவிடம் ஆரம்ப விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை நேற்றைய தினமே சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்காக வழங்கப்படும் மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.