புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாட தொழிற்சங்க ஒன்றியத்தினரை சந்திக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் வெற்றியளிக்காவிடின், எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னரான காலப்பகுதி நாட்டிற்கு மிக தீர்மானமிகு காலப்பகுதியாக மாறக்கூடும் என அவர் கூறினார்.
அதற்கமைய, முதலாம் திகதிக்கு பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிடும் சட்டத்திற்கு எதிராக 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இணைந்து கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.