இன்றையதினம் யாழ்ப்பாணம் – உடுத்துறையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. மூன்றாவது நாளாக இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தனர்.
அவர்களை வழிமறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள், இது எங்களுடைய சொந்த காணி. இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/07/IMG-20230726-WA0111-1024x705.jpg)
இந்நிலையில் குறித்த நில அளவை அதிகாரியால் தனக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை தருமாறு கூறப்பட்ட நிலையில் காணி உரிமையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.சுகிர்தன் ஆகியோரால் ஒப்பமிட்டு கடிதம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை வடமராட்சி கிழக்கில் நேற்று முன்தினம் தொடக்கம். தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் கடற்படைக்கு காணி சுபீகரிப்பு நடவடிக்கைகள் இடம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது