deepamnews
இலங்கை

கச்சதீவை மீட்டால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? – தமிழகத் தலைவர்கள் பதில் கூற வேண்டும்

கச்சதீவை மீட்போம்  என தமிழக மீனவ மக்களிடம் கூறும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்திய மீனவர் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியுமா என யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதி மகேஷ் கேள்வி எழுப்பினார்.

நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய பிரச்சனை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்ற நிலையில் வடபகுதி மீனவர்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரை இந்தியா மீனவர்களின் அத்துமறிய இழுவைமடித் தொழிலை நிறுத்துமாறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு கலைத்து விட்டோம்.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு கச்சதீவை மீட்பது தான் வழியென கூறியுள்ளார்.

அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் குப்புசாமி அண்ணாமலையும் இந்தியா மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு கச்சதீவை மீட்பதற்கு மோடி அரசு தலையீடு செய்யும் என கூறியிருந்தார்.

நான் இவர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன் கச்ச தீவை இந்தியாக்கு வழங்கி விட்டால் வடபகுதி கடலில் இந்தியா மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியுமா?

கச்சதீவு எங்களிடம் இருக்கின்ற போது காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் குதிரை முனை மற்றும் திருகோணமலை வரை இந்திய மீனவர்கள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கச்சதீவில் நிரந்தரமாக இந்திய மீனவர்களை தங்க விட்டால் இலங்கையின் முழுக் கடலையும் நாசப்படுத்தி மீனவ மக்களின் வாழ்க்கையை சீரழித்து விடுவார்கள்.

உலக மீன் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்ற நிலையில் எமது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய மீன்பிடியினால் 30 வீதமான மீன்களை அள்ளிச்செல்கிறார்கள்.

ஆகவே சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பிய இந்தியா  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு இயலாமல் இருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

Related posts

இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் எஸ்.ஜெய்சங்கர்?

videodeepam

157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ்ப்பாண ஆலயங்களில் பூஜை வழிபாடுகள்!

videodeepam

சர்வதேச நாணய நிதியத்துடன் டிசம்பர் 12 இல் விசேட கலந்துரையாடல்

videodeepam