இலங்கை முப்படைகளில் இருந்தும் கடந்த பத்து மாதங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் தப்பியோடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து மாதங்களில் முப்படைகளின் 140 அதிகாரிகள் உட்பட 15 ஆயிரத்து 360 பேர் பாதுகாப்புப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதில் இராணுவத்தின் 99 அதிகாரிகளும், கடற்படையின் 26 அதிகாரிகளும் மற்றும் விமானப்படையின் 15 அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
இவ்வாறு முப்படைகளில் இருந்து தப்பியோடி தலைமறைவானவர்களைக் கைது செய்வதற்குப் பொது மன்னிப்பு காலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரையில் தலைமறைவானவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஒப்பந்தக் கொலையாளிகளாகப் பாதாள உலகத் தலைவர்கள், முப்படைகளில் இருந்து தப்பியோடியவர்களைப் பயன்படுத்துகின்றனர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.