deepamnews
இலங்கை

கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்  – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மோசமடைந்தால், வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்  என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரித்துள்ளார்.

முடிந்தால் அதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறும் அவர், ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  இதனைக் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் வரை ஜனநாயகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

ஜனாதிபதியான பின்னர் அவரது சர்வாதிகார செயற்பாடுகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதத்திலேயே பிரச்சினை காணப்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சிக்கலும் கிடையாது.

வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதும் தவறில்லை.

வன்முறைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது.

எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமையை, சட்டத்தை தமக்கேற்றாற்போல வளைத்து முடக்குவதிலேயே பிரச்சினை உள்ளது.

அடக்குமுறைகளை தொடர்ந்தும் பிரயோகிக்க வேண்டாம் என்றும் , மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

இவை தொடருமானாலும் நாம் நீண்ட நாட்களுக்கு பொறுமையுடன் இருக்கப் போவதில்லை.

இன்னும் குறுகிய கால அவகாசத்தை ஜனாதிபதிக்கு வழங்குவோம். அதன் பின்னர் நாம் இலட்சக்கணக்கான மக்களை கொழும்பில் ஒன்று திரட்டி, அவரை சிறை பிடிப்போம்.

முடிந்தால் எம்மை தடுக்குமாறு சவால் விடுக்கின்றோம்.

அடக்குமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் நாம் கொழும்பில் பாரிய மக்கள் அலையுடன் களமிறங்குவோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நாம் இந்த எச்சரிக்கையை விடுத்தோம். அதனை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

videodeepam

வீடொன்றில் இருந்து தினமும் வீதிக்கு தண்ணீர் விடப்படுவதனால் வீதியால் செல்வோர் அசௌகரியத்தில்!

videodeepam

ஐ.எம்.எப். உடன்படிக்கைக்கு நாடாளுமன்ற அனுமதி: அமைச்சரவை அங்கீகாரம்

videodeepam