deepamnews
இலங்கை

இரட்டைவேடம் போட்டுக்கொண்டு மட்டக்களப்பு மக்களை ஏமாற்ற முடியாது – இரா.சாணக்கியன் தெரிவிப்பு

இரட்டைவேடம் போட்டுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களை இன்னும் ஏமாற்ற முடியும் என்ற நோக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சுமத்தியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று பிள்ளையான் முதுகெலும்பு உள்ளவரா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கும். அனைத்து பகுதிகளிலும் தமிழரசுக் கட்சிகான ஆதரவு தளம் என்பது அதிகரித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஸ யாழில் வீணைச் சின்னத்திலும் கிழக்கில் மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் பொதுஜன பெரமுன போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.

படகு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டின் முகவராகவே உள்ளது என்பதை நாங்கள் கடந்த காலத்தில் தெரிவித்து வருகின்றோம்.

பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் என்பவர் மூன்று பகுதிகளில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்த செய்தி வெளிவந்திருந்தது.

ஆனால் வேட்பு மனுக்கான கட்டுப்பணத்தினை அவர் செலுத்தியிருந்த போதிலும் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.

அப்போதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அன்று எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் பசில் ராஜபக்ஸ படகு கட்சியின் ஊடாகத்தான் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிடுகின்றது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள், ஒரு முதுகெலும்பு உள்ளவராகயிருங்கள்.

டக்ளஸ் தேவானந்தா தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி என்று தைரியமாக ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் நீங்கள் மட்டும் இங்கு இரட்டைவேடம் போடுகின்றீர்கள். மட்டக்களப்பு மாவட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்று நினைக்கின்றீர்களா?.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எங்களுக்கு போட்டியில்லை. ஆனால் மாவட்ட மக்களை தொடர்ந்து நீங்கள் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கச்சதீவு திருவிழாவுக்கு 12 இலட்சம்  ரூபா செலவு – இரு மாதங்கள் கடந்து  மாவட்ட செயலகம் பதில்

videodeepam

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – எரிபொருள் விலை குறைப்பு

videodeepam

முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு.

videodeepam