deepamnews
இலங்கை

குளிரான காலநிலையால் வடக்கு – கிழக்கில் இதுவரை 1,660 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்து 660 கால்நடைகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  மதியம் 12 மணிவரையில் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கறவை பசுக்கள், மாடுகள் அடங்கலாக 691 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

அத்துடன் 206 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

இதுதவிர, வட மாகாணத்தில் 329 கால்நடைகள் நோய் நிலமையுடன் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கறவை பசுக்கள், மாடுகள் அடங்கலாக 555 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

அத்துடன் 108 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோழி இறைச்சி வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய சகல இறைச்சி விற்பனை நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக மாகாண உள்ளூராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல இறைச்சி விற்பனையகங்களுக்கும் எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிர் காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தன.

இந்தநிலையில், உயிரிழந்த கால்நடைகள் இறைச்சி விற்பனைக்காக பயன்படுத்தக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மாகாணத்திலுள்ள சகல இறைச்சி விற்பனையகங்களும் மூடப்பட்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கால்நடைகளையும், இறைச்சிகளையும் மாகாணங்களுக்கு இடையில் கொண்டு செல்வதை தற்காலிகமாக கைவிடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாடுகளில் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணத்தை அனுப்பிய இலங்கையர்கள்

videodeepam

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி.தோமஸ் வில்லியம் தங்கத்துரை காலமானார்

videodeepam

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் 21 ஆம் திருத்தத்தை கொண்டுவாருங்கள் – சஜித் 

videodeepam