ஈவிகேஎஸ் இளங்கோவனை, எதிர்த்துப் போடியிடுபவருக்கு டெபாசிட் போய்விட்டது என்று சொல்லுமளவிற்கு மிகப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்திலே, வெற்றி பெறச் செய்வதற்கு எங்கள் கூட்டணி கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கள்கிழமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: “அன்பு சகோதரர் ஈவிகேஎஸ் இளங்கோவனை, எதிர்த்துப் போடியிடுபவருக்கு டெபாசிட் போய்விட்டது என்று சொல்லுமளவிற்கு மிகப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்திலே, வெற்றி பெறச் செய்வதற்கு எங்கள் கூட்டணி கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது.
காரணம், தமிழகத்திலே நடைபெறுகின்ற ஆட்சியின் மீது நாட்டில் நாளுக்குநாள் மக்கள் மத்தியிலே மதிப்பு உயர்ந்து வருகிறது. ஆளுநர் சனாதன ஆட்சி நடத்துகிறார். இந்தியா முழுவதும் தாங்கள் ஆட்சிக்கு வராத இடங்களில் எங்கும் ஆளுநரை வைத்து ஆட்சி நடத்துகின்ற அக்கிரமத்தை பாஜக செய்து கொண்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து துறையிலும் முதலிடத்தில் இருக்கின்ற திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய மகத்தான வெற்றி பெறுவதிலே ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று அவர் கூறினார்.