இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறுகிய சுயலாப நலன்களுக்காக சில தரப்புக்கள் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் சீனாவினால் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதாக பரப்பப்பட்ட போலி தகவல் தோற்றுப்போன நிலையில், தற்போது இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம், அனுமதி அளிக்கப் போவதாக கதைகள் கூற ஆரம்பித்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.