இலங்கையில் சமூக வலைத் தளங்களையும் வெகுஜன ஊடகங்களையும் ஒடுக்கும் முகமாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம், மக்களை ஒடுக்குவது குறித்தும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, சமூக செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆர்வலர்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றையும் வெகுஜன ஊடகங்களையும் ஒடுக்கும் முகமாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றி உள்ளது
மறுபுறம், அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறைக்கு எதிராக நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து வரப்பிரசாத பிரச்சினைகளை முன்வைத்து விசாரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர். ஜனநாயகத்திற்கு எதிராக சமூகத்தில் எழும் குரலை நசுக்குவதற்கும், அரசாங்கத்திற்கு எதிரான குரலை நசுக்குவதற்கும் அரசாங்கத்தின் சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தி இருப்பதை இதன் மூலம் நாம் காணமுடிகிறது என்று தெரிவித்தார்.