அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இந்தக் குழு கூடிய போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நீடிப்பு வசதியை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் நிதியமைச்சகம் வழங்க வேண்டும் என்ற பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
விவாதத்திற்குப் பிறகு, தேவைப்பட்டால் வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.