சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அல்லது இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் தற்போது பாரிஸ் கழகம், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட எமது இரு தரப்பு கடன் கொடுநர்களிடமிருந்து நிதி உறுதிப்பாட்டை பெறும் நடவடிக்கையிலேயே உள்ளோம்.
அத்துடன், இந்த நடவடிக்கையை மத்திய வங்கி முழுமையாக கைவிட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்துடன் அது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும், நாம் எந்த வகையிலும் நிதி உறுதிப்பாட்டை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தவில்லை. அது முற்றிலும் பொய்யானது.
நாம் தொடர்ந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறோம். அதனை பூரணப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளோம்.
ஜனவரியில் அதனை பூர்த்திசெய்துகொள்ளமுடியும் என நாம் முன்னதாக கூறினோம். எனவே, நாம் எந்த விதத்திலும் எமது எதிர்பார்ப்பிலிருந்தும், கடமையிலிருந்தும் பின்வாங்கவில்லை.
இந்த மாதத்தில் எம்மால் அதனை செய்ய முடியாவிட்டால் அடுத்த மாதத்தில் அதனை பூர்த்திசெய்யமுடியும்.
அதற்கமைய, நிதி உறுதிப்பாட்டை பெற்று அதனை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்தும், எமது மொத்த பொருளாதார கொள்கையை முன்வைத்தும், மிகவும் குறுகிய காலத்தில் எமது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும்.
அவ்வாறே நீண்டகால மறுசீரமைப்பு மற்றும் சரியான கொள்கை வரம்பு என்பவற்றின் ஊடாகவும் எம்மால் இதனை செய்யமுடியும்.
நாட்டை ஸ்திரப்படுத்தும் திசையில் நாம் பயணிக்கையில், நாணய நிதியத்தின் உதவியுடனோ அல்லது இன்றியோ நாம் அதனை செய்யவேண்டும். நாட்டை சரியான திசை நோக்கி நகர்த்திச்செல்ல வேண்டும்.
எனவே, நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு நாம் இந்த குறுங்கால அல்லது நீண்டகால மறுசீரமைப்பை செய்யவேண்டும் என்றார்.