deepamnews
இலங்கை

ஜெனிவா தீர்மானம் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் கொடுக்காது – சுமந்திரன்

ஐ.நா மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது என்றும், அதனால் அங்கு நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக் கொடுக்காது என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,

“ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மூலம் செய்யக் கூடியது என்ன என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

ஏனென்றால், மனித உரிமை பேரவையில் 10 வருடங்களாக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

அதனால் இந்த தீர்மானம் ஊடாக செய்ய முடியாததை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதில்லை.

என்றாலும் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மூலம் இலங்கையை சர்வதேச கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேநேரம் மனித உரிமை பேரவைக்கு இருக்கும் அதிகாரங்களை வைத்துப் பார்ப்போமானால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் முன்னேற்றகரமான தீர்மானம் என கருதலாம்.

ஆனால் அது எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக் கொடுக்காது.

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் தாங்கள் எதிர்பார்த்த தீர்வுகள் கிடைக்கவில்லை எனவும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் சிலர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினுடைய அதிகார வரம்பு என்ன என்பதை தெரியாதவர்கள்தான் இவ்வாறு கதைக்கின்றனர்.

இந்த பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்தாத தீர்மானங்களைத்தான் இந்த பேரவைக்கு நிறைவேற்ற முடியும். அதனால் பெரியளவில் இந்த தீர்மானம் மூலம் எதிர்பார்க்க முடியாது.

அத்துடன் இந்த பேரவையின் மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தால், அது மக்களின் தவறு அல்ல.

அரசியல்வாதிகள்தான் இவ்வாறான தவறான எதிர்பார்ப்பை கொடுத்திருக்கின்றார்கள்.

அத்துடன்  இந்த தீர்மானம் இலங்கைக்கு மிகவும் சவால் மிக்கதானதாகும்.

ஏனெனில் மனித உரிமை பேரவையின் தீர்மானம் எந்த ஒரு நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும். நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால், இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்த மற்றும்  நடுநிலையாக இருந்த நாடுகளின் உதவி இலங்கைக்கு மிக முக்கியமானதாகும்.

அதனால் இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தில்  உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களுக்கு ஒத்துழைக்காமல் இருக்கின்றவரைக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள எழுவதுகூட கஷ்டமானதாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

மீண்டும் காற்றுச் சுழற்சி – அடுத்த வாரம் முதல் மழை.

videodeepam

ஆசிரியர்களால் மாணவர்கள் துஸ்பிரயோகம்  – ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

videodeepam

மின் கட்டணம் அதிகரிக்கப்படாது – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam