கள்ளச்சாராய வழக்கில் கைதான திமுக பெண் கவுன்சிலரின் கணவரை விடுவித்ததேன் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக எக்கியார்குப்பம் வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ”விழுப்புரம் மாவட்டக் காவல்துறை செயல்பாடற்ற நிலையில் இருப்பதை இந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் நிரூபித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும், கஞ்சா, கஞ்சா சாக்லேட், போதை ஊசி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பால் பாலியல் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.
சாராயம் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகிறது. காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காரணம், திறைமையாக செயல்படக்கூடிய காவல்துறையை முடக்கியது திமுகவினர் தான் என்று தெரிவித்துள்ளார்.